தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவி அவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.
வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.
இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்த நான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள், குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது.
சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை.
அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.
எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.
நன்றி. வஸ்ஸலாம்.
Seja o primeiro a comentar
கருத்துரையிடுக